அன்னை தேசமே எந்தன் தேசமே

அன்னை தேசமே அன்னை தேசமே
ஆளுமை மிக்கதோர் எந்தன் தேசமே
சூழ்ச்சிகள் நித்தமும் கண்ட போதிலும்
வீழ்ச்சிகள் இன்றியே வென்ற தேசமே

வந்தோரை வரவேற்கும் வன்னி தேசமே
உன் வனமெல்லாம் இருப்பிடமாய்
தந்த தேசமே
வனப்பெல்லாம் சூறையாடிச் 
சென்ற போதிலும் 
வாழ்த்தியே விடை கொடுத்த எந்தன் தேசமே

வளமெல்லாம் எமக்காகத் தந்த தேசமே
வயிறார அன்னமிடும் வன்னி தேசமே
உழைப்பிற்கு இலக்கணமாய் ஏராளர்கள்
உவப்போடு வாழ்கின்ற எந்தன் தேசமே

கண்ணகியர் மொத்தமாய் வாழ்ந்த தேசமே
காவலராய் அண்ணன்மார் மிளிர்ந்த தேசமே
பெற்றெடுக்கா குழந்தைகளை சுமந்ததேசமே
பல்கோடி பெற்றோரை தந்த தேசமே

ஊரெல்லாம் உறவாக்கி வைத்த தேசமே
உதிரத்தில் கலந்த என் உணர்வு தேசமே
காலத்தில் கலைகின்ற கனவு தேசமே
ஞாலத்தில் நிலையாக எழுக தேசமே

வன்னியூர் இனியவள்