அப்பா..


அப்பா மகள்
உறவைப் பாட
அகராதியில்
வார்த்தைகளில்லை.
ஆசைப்பட்டு
கேட்டதெல்லாம்
அந்தக் கணமே
அடுக்கி வைப்பாரு.
ஊரை
சுற்றி காட்டிடவே
ஈருளியில்
ஏத்தி செல்வாரு.
கோவப்பட்டு
பார்த்ததில்லை
கோர முகம்
அவருக்கில்லை.
பார்கத் தான்
நம்பியாரு
பாசத்திலே
எம்ஜியாரு..
சொந்தக் காலில்
நின்றிடவே
தோட்டம் கொத்தி
வாழ்ந்தாரு.
சத்தியத்தின்
எல்லைக்குள்ளே
சந்தோஷமாக
வாழ வைச்சாரு.
கை முழுக்க
காய்ச்சிருக்கும்
காலில் பித்த
வெடிப்பிருக்கும்.
பள்ளிப் படிப்பு
முடியும் வரை
பகலிரவாக
பாடுபட்டாரு.
படுத்ததை
நான் பார்த்ததில்லை
மருந்து வாங்கி
குடிச்சதுமில்லை.
மதுவுக்கு
அவர் அடிமையில்லை
சாது என்றால்
மிகையுமில்லை.
பந்தக்காலு
போடும் வரை
பக்கமிருந்தே
பாதுகாத்தாரு.
கை பிடித்து
நான் கால் மாற
கட்டிப் பிடித்து
கதறினாரு.
சாமியை
நான் பார்த்ததில்லை.
என் குல சாமி
அப்பாவோடே
வாழ்ந்துமுள்ளேன்.
இருக்கும்
வரை புரியவில்லை
புரியும் போது
அவரும் இல்லை.
நெஞ்சில்
வாழும் தெய்வமவர்
என்றுமென்னை
காத்து நிற்பார்.

ஆக்கம் கவிஞர் தயாநிதி