இதுவரை…..கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

நரைவிழுந்தாலும்
திரை விழவில்லை.
முதுமை என்னை
வருத்தவுமில்லை.
இளமை என்னை
விரட்டவுமில்லை.

இனிமை என்னை
வெறுக்கவுமில்லை.
வறுமை என்னை
வாட்டாமலுமில்லை.
பொறுமை என்னை
விட்டு போகவுமில்லை.

கனவுகளும் காதலும்
கலையவுமில்லை.
கடந்த பாதைகள்
வாதையுமில்லை.
நடந்த பாதையில்
நடை மாறவுமில்லை.

கூடப் பழகியவர்
கூடவே இல்லை.
சேர்ந்து நடந்தவர்
திசைகளில் மாற்றம்
கவலையுமில்லை.

தாங்கும் தைரியம்
தளரவுமில்லை.
சதிகளும் அடிக்கடி
விட்டபாடுகளில்லை
ஆனாலும் நான்
மாறவுமில்லை.

வாழப் பிறந்ததால்
வாழ்க்கை சலிக்கவுமில்லை.
ஏனோ என்னை சிலருக்கு
பிடிப்பதுமில்லை.
பிடித்தவர் தொகையும்
குறையவுமில்லை.

வாழ்வின் எல்லை
தெரியாமலில்லை
தெரிந்தும் நான்
தடுமாறவுமில்லை..
பிறப்பும் இறப்பும்
வாழ்வின் சூத்திரம்…
எதுவரை நிலைக்குதோ
அதுவரை வாழ்வோம்.

Merken

Merken