யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இரா.சடகோபன் எழுதிய ‚இரத்த வரலாறு‘ நாவல் அறிமுக நிகழ்வு.
மலையக எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய ‚இரத்த வரலாறு‘ நாவல் அறிமுக நிகழ்வானது 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபரும், கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமை வகித்தார். நிகழ்வினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. நதியோர நாணல்கள் குழுமம் நிகழ்வோடு இணைந்து செயலாற்றியது.
முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் இசைத்தனர். நிகழ்ச்சிகளை ஓய்வுபெற்ற அதிபரும், யாழ் மாவட்ட தேசிய சாரணிய பயிற்றுநர் தலைவருமான சரோஜினிதேவி கனகரட்ணம் நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கினார்.
வரவேற்புரையினை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வற்சலா துரைசிங்கம் வழங்கினார். வாழ்த்துரையினை ஆளுநருக்கான உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் நிகழ்த்தினார். சிங்கள மொழி எழுத்தாளர் ஹேமச்சந்திர பத்திரன கருத்துரை வழங்கினார்.
அறிமுக நிகழ்வினை யோ.புரட்சி தொகுத்தளிக்க, நூலினை ஒளி அரசி இதழின் ஆசிரியர் பா.ஜெயிலா அறிமுகம் செய்துவைத்தார். முதற் பிரதியினை கனடா ‚படைப்பாளிகள் உலகம்‘ சார்பில் கவிஞர் மாணிக்கம் ஜெகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலந்துகொண்டோர்களுக்கான நூற்பிரதிகள் அளிக்கப்பட்டன. நிகழ்வில் நூலாசிரியர், பிரதம விருந்தினர் ஆகியோருக்கு கெளரவம் அளிக்கப்பட்டது.
நூலின் ஆய்வுரையினை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தரும், ‚யாழ்ப்பாணம் நினைவுகள்‘ நூலின் ஆசிரியருமான வேதநாயகம் தபேந்திரன் நிகழ்த்தினார்.
பிரதம விருந்தினர் உரையினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் நிகழ்த்தினார். ஏற்புனையினை நூலாசிரியர் இரா.சடகோபன் வழங்கினார். இளையோர் கருத்துப் பகிர்வினை யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வருண் சர்மா வழங்கினார்.
நன்றியுரையினை யாழ்பாவாணன் வெளியீட்டக இயக்குநர் யாழ்பாவாணன் வழங்கினார்.
ஏற்கனவே கொழும்பு, மலையகம் போன்ற பகுதிகளில் அறிமுகமான ‚இரதாத வரலாறு‘ நாவலானது வடக்கிலும் அறிமுகமாகியமை திருப்திகரமான ஒன்றே.