ஈழத்தின் கிளிநொச்சியில் நடந்தேறிய தமிழாசான் த.செல்வா ஆக்கிய ‚அடங்காப் பறவை‘ கவிநூல் வெளியீட்டு !

ஈழத்தின் கிளிநொச்சியில் நடந்தேறிய தமிழாசான் த.செல்வா ஆக்கிய ‚அடங்காப் பறவை‘ கவிநூல் வெளியீட்டு நிகழ்வு. விலையேற்றம் மலையேற்றமாய் உயர்வு, காகிதத் தட்டுப்பாடு, பொருட்களுக்கு படாதபாடு. இப்படியான நிலையிலும் இலக்கியப் பாய்ச்சலை இலட்சியப் பாய்ச்சலாக கொண்டு நகரும் அணிகளும், ஆட்களும் குறையவில்லை, இதுவுமொரு இன்பமே. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரியும் ஈழத்துப் படைப்பாளர் தவராசா செல்வா ஆக்கிய ‚அடங்காப் பறவை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 07.05.2022 சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு, ஈழத்தின் கிளிநொச்சி மாவட்ட நகரப் பகுதியில் அமையப்பெற்ற கூட்டுறவு மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமை வகித்தார். முன்னதாக பங்கேற்பாளர்கள் வரவேற்பு, சுடரேற்றல், அகவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தினை அபிரா அளித்தார். வரவேற்புரையினை சிந்திசை வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து வாழ்த்துரையினை யோ.புரட்சி அளித்தார். வெளியீட்டுரையினை பல்துறைக் கலைஞர் ஏழுமலைப்பிள்ளை வழங்கினார். நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினராகிய யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைக்க, சட்டத்தரணி சுகாஷ் கனகரட்ணம் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளும், பங்கேற்பாளர்களுக்கான நூற்பிரதிகளும் வழங்கப்பட்டன. நூலின் மதிப்பீட்டுரையினை கவிஞர் பொலிகையூர் சிந்துதாசன் வழங்கினார். தொடர்ந்து சட்டத்தரணி சுகாஷ் கனகரட்ணம் உரை வழங்கினார். நூலின் இரண்டாம் மதிப்பீட்டுரையினை கவிஞர் ஜெகா ஆற்றினார். தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்த்தினார். கவிஞர் த.செல்வா அவர்களின் தாயார் காணாமல்போன தனது மகளின் நினைவோடு அளித்த கண்ணீர்க் கவிதையும் நிகழ்வில் இடம்பெற்றது. ஏற்புரையினை நூலாசிரியர் த.செல்வா வழங்கினார். தவராசா செல்வா அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் இளங்கலைமாணி பட்டத்தினை நிறைவு செய்ததோடு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழியலில் கலைமாணி பட்டத்தினையும் நிறைவு செய்தவர். நிகழ்வில் சமூகப்பணியாக கவிஞர் செல்வா அவர்களின் காணாமல்போன தங்கை நகுலா அவர்களின் நினைவோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்டன. நிகழ்வில் தொகுப்புரைஞராக தவராசா சிந்துஜா பங்காற்றியமையும் சிறப்பானது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert