என் காதலே………….!

உயிரென நீயும் உதித்தாய்
உணர்வென என்னில் கலந்தாய்
மனம் நிறை வேதனை எல்லாம்
முழுதுமாய் மறக்க வைத்தாய்

கனவிலும் நீயே சிரித்தாய்
கற்பனைச் சிறகு விரித்தாய்
விதி வரைந்த பாதை எல்லாம்
மதி கொண்டு வெல்ல வைத்தாய்

சேயாகி எந்தன் மடி தவழ்ந்தாய்
செவ்விதழ் பதித்து முத்தமிட்டாய்
சொக்கிடும் அழகால் மகிழ வைத்தாய்
சொந்தங்கள் பலவும் எனக்களித்தாய்

மூச்சான எந்தன் மொழித்தாய்க்கு
முத்தாரம் சூட்டி மகிழ்வித்தாய்
அநீதிகள் நிகழ்கிற வேளையெல்லாம்
அலையென நீயும் ஆர்ப்பரித்தாய்

கவிதையே எந்தன் காதலனே
கற்பனை உலகில் சிரிப்பவனே
நித்தமும் என்னில் மலர்கின்றாய்
மொத்தமாய் என்னை ஆள்கின்றாய்

வன்னியூர் இனியவள்