கவிதையாய் படி..!

கற்பனை
காட்டாறாய்
கட்டுடைக்க
முற்றிய நெற் கதிராய்
நற்றமிழ்
மன வயலில்
அறுவடையானது..
உயிர்
மொழியோடு
உறவாடும்
பொழுதுகள்
மெய்யொடு
மெய்சேர்ந்த
உல்லாச உணர்வுகள்..
விழித்திரையில்
பதிவானவை
படபடப்பின்றி
சாட்சிகளாய்
காட்சிகளாய்
கவிதையாகி விரிகின்றது.
மாண்ட
கனவுகள்
மீண்டெழும்.
தூண்டும் ஆசைகள்
துள்ளிக் குதிக்கும்.
தவண்ட
தரையில் துவண்ட
துயரங்கள்
வரிகளை கண்ணீரால்
நனைக்கும்.
படரும்
கொடியாய்
நினைவுகள்
பற்றி படரும்.
மிரண்ட
வாழ்க்கை
திரண்ட அன்பால்
வீறு கொண்டெழும்..
இருண்ட
மனதில் ஞான ஒளி
விடியலுக்கு
வெளிச்சம் காட்ட
கவிண்ட
தலை நிமிரும்
சுருண்ட தேகம்
யாகத்துக்கு தயாராகும்..
புரிந்தவர்க்கு
இது கவிதை
புரியாதவர்க்கு
புது (க)விதை.!

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி