செம்பருத்திப் பூக்களுக்கு ஒருநாள் வாழ்வு. கவிஞர் கோவிலுர் செல்வராஐன்

பக்கத்தில் கேட்பதுபோல்
இருக்கும்
உன் பாசம் மிகுந்த
இனிய குரல்
துக்கத்தில் இருக்கும்
என் இதயத்துக்கு
தடையின்றி
அடைப்புகள்
எதுவுமின்றி
இரத்தத்தை கொண்டுவர
உதவுகின்றதா.
நான் அறியேனம்மா
காலம் கடந்து போனது
காலனும் வந்து போனான்
ஆனாலும் அவனால்
காரியம் ஆற்ற முடியவில்லை
தோராயமாக ஏதோ
சுரண்டி விட்டுப் போய்விட்டான்
மீண்டும் வருவான்
இந்த பீனிக்ஸ் பறவையை
அபகரித்து செல்ல.
காலத்தின் பிடியில்
இந்த பறவையின்
சிறகுகள்
உதிர்ந்து கொண்டு
இருக்கின்றன
செம்பருத்திப் பூக்களுக்கு
ஒருநாள் வாழ்வு
அதுபோல
பிறப்பெடுக்க வேண்டும்
வலிகள் இல்லாமல்
போய்ச்சேர…