நீயின்றி என் உயிரில்லை!!கவிதை ஜெசுதா .யோ

தனிமையில் இருந்தபோது
வரமாய் வந்தாய்
என் சோகங்கள் தீர்த்தாய்
தாய் போல பாசங்கள் தந்தாய்
சில நாட்களில் மட்டும் நீ
தொலைவாகிறாய் சொல்லாமலே

வழிகள் பார்த்து விழிகள் நோக
காத்திருப்பேன் உனக்காகத் தானே
வெறுத்தாவது நீ பேசும்
ஒற்றை வார்த்தையில்
கோடி சந்தோசம் கண்டேன்
உனக்கென ஆயிரம் உறவிருக்கலாம்
எனக்கென நீ மட்டும் தானே
என் உறவாக என் உயிராக

உன்னை நினைக்கும் பொழுதுகள்
என் கன்னங்களிள் வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் சாட்சி – !நான்
உன்மேல் வைத்திருக்கும் அன்புக்கு

என் அன்புக்குரியவனே
என் சண்டைகள் எல்லாம்
உன்னை பிரிவதற்கல்ல
உன்னை பிரிந்துவிடக்கூடாதெனவே

உன்னோடு வாழ்ந்த ஒரு நாள்கூட
ஒரு கோடி சந்தோசமே
இன்னொரு ஜென்மம் வேண்டும்
உனக்காக நான் வாழவே

எத்தனை கவி எழுதியபோதும்
எனக்காக எழுதவில்லை
உன் அன்பின் வடிவங்கள் அவை
உன் காதலின் கருப்பொருள் அவை

என் உயிர் நீயென சொல்ல மாட்டேன்
உயிர் கூட ஒரு நாள் பிரியுமே
நீ என் ஆத்மாவாக இருந்துகொள்
என்றும் என்னோடு துணையாக

நான் இறந்தால் கூட
என் அன்பு உன்னோடு தானே
என் காதலா
என்ன தவம் நான் செய்தேன்
உன்னை நான் அடைய

உன் கண்கள் பார்க்கும் போதெல்லாம்
மயங்கிப் போகிறேன் உனக்குள் நானே
என்னவனே என்னை என்ன செய்தாய்
என் உயிர் வரை நுழைந்து
என்னோடு நீ வாழ்கிறாயே

காற்றைப் பார்த்து
பொறாமை எனக்கு
உன்னைத் தினம்
தீண்டிச் செல்கிறது

சுவாசம் இழக்கும் நொடிகள்
கண்களை மூடி உன்னைத் தான்
நினைக்கிறேன் – என்
இறு மூச்சாக இருந்தாலும்
இறப்பில் கூட உன் நினைவில் இருக்கவே

என் அன்பை எப்படி சொல்ல
என்னவனே எப்படி புரியவைக்க
நீயில்லாது நான் இல்லடா
நீயின்றி என்னுயிரும் இல்லையே
நீ தானே என் உலகம்
நீ மட்டும் தான் எனக்கு
எல்லாமே..
நீயின்றி நான் இல்லை …

ஆக்கம் ஜெசுதா யோ

Merken