„பனிவிழும் மலர் வனம்“??53

அனசனை விட்டு நீங்க மனமின்றியே அங்கிருந்து சந்தியாவிடம் வந்தாள் மதுமதி.இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதால் ஏற்கெனவே சந்தியாவை தெரிந்திருந்த போதும் இதுவரை ஒருவரோடு ஒருவர் பேசியது கிடையாது . மதுமதியை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றாள் சந்தியா. சந்தியா சிரித்தபடியே “ சங்கர் உங்களைப்பற்றி நிறைய சொன்னாரு…,உங்க காதலைப்பற்றி கதைகதையாக சொன்னாரு..நீங்க ரொம்ப அதிஸ்டசாலி காதலித்தவனையே கட்டிக்கப்போறீங்க.. நானும் சங்கரை ரொம்ப விரும்புறன்.. ஆனால் எப்படி உங்க மாமியின் சமய ,சாதி சம்பிரதாயத்திற்கு முகம் கொடுக்கப்போறேனோ தெரியலை.. நான் மாமிசம் விரும்பி சாப்பிடுவேன்.. இனி அதையெல்லாம் ஒதுக்கி மாமிக்கு ஏற்ற மருமகளாக சைவப்பெண்ணாக மாறிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.உண்மையை சொல்லப்போனால் தாயகப் போருக்கு பின் நான் திருநீறு பூசியது கிடையாது… கோயிலுக்குப் போகிறதேயில்லை.. என் அம்மா அப்பா துடிதுடித்து சாகும்போது கும்பிட்ட தெய்வங்கள் எங்கே போனவை?? என மனதிற்குள் திட்டுவேன்..தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன் தெரியுமா?? என் இருண்ட வாழ்வில் நான் தேடிய ஒரு மின்மினிதான் சங்கர்..அவரு எனக்கு கிடைப்பார் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நீங்களே எனக்கு விட்டு தந்து இருக்கிறீங்க..“ என படபடவென சந்தியா சொல்லும்போதே கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்திருந்தது. சந்தியாவை தோளோடு அணைத்து ஆதரவாய்““ சந்தியா இனி நீங்க அழக்கூடாது.. சங்கர் உங்களை பூப்போல பார்த்துக்குவான்.. மாமி ரொம்ப நல்லவா.. கொஞ்சம் விரதங்கள் கோயில் என வீட்டில் சில கட்டுப்பாடுகள் அதிகம்தான்.. கடல் கடந்தாலும் கடந்து போகாத அவரின் சாதி ,சமயம் என ஒரு வட்டத்திற்குள் வாழ்கிறாங்க..அதுக்கு நீங்க அவாவோடு ஒத்துழைத்தால் நல்லது…., மாமியார் மெச்சும் மருமகளாக மாறுங்க..,“ என கூறியதும், மெல்ல சிரித்த சந்தியா““ நிச்சயமாக மது“ என்றபடி இருவரும் வந்து காரில் ஏறினர்.

இவர்களை சுமந்துவந்த கார் வீட்டை அடைந்தபோது வெளியில் தோட்டத்தில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். உச்ச வெப்பநிலை 26 பாகையாக இருந்தது.
தோட்டத்தில் பூத்துக்குலுங்கின எழிலான பலவர்ணரோஜாக்கள்.. அந்த அழகை இரசித்தபடி மாமியும், மாமாவும்.. அருகே கணணியில் மூழ்கியபடி சங்கரும்… கூட்டிக்குள்ளே கீச் கீச் என்று மகிழ்ச்சியுடன் காதல் மொழி பேசும் காதற்பறவைகள்( love birds)..
சங்கர் ஆசைப்பட்டு இவற்றை வாங்கிவந்திருந்தான்.. அருகே வெள்ளை வெளீர் நிறத்தில் இரு அழகிய முயல்கள் .. சங்கர் இவற்றுடன் பேசுவதோடு சரி.. மற்றும்படி அவற்றை பராமரிக்கும் பொறுப்பு எல்லாம் தாயாரிடமே ஒப்படைத்திருந்தான்..

அன்பாக இருகரம் நீட்டி வருங்கால மருமகளை வரவேற்று தன்னருகில் சந்தியாவை அமர்த்திய மாமியார் சந்தியாவை ஏற இறங்க பார்த்தவிதம் சந்ந்தியாவுக்கு கூச்சத்தை வரவழைத்தது.. சங்கரோ கண்களை சிமிட்டியபடி மெல்ல சிரித்தான்.
“ அழகாய்த்தான் இருக்காள்., ஆனால் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்காளே.. “ என மனதில் நினைத்தபடி சந்தியாவைப்பற்றி எல்லாம் விசாரித்துக்கொண்டார் சங்கரின் தாயார். தன் மகனைப்பற்றி பேசும்போது மட்டும் ஆயிரம் மின்விளக்குகளின் வெளிச்சம் அந்தத்தாயின் முகத்திலே தெரிந்தது.. பொதுவாக தாய்மாருக்கு பெண்பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளிடம் பாசம் அதிகம் ஜாஸ்தி.மகன் ஆசைப்பட்டு எது கேட்டாலும் இதுவரை மறுப்பு தெரிவித்ததே கிடையாது .. தாயார் ஆசைப்பட்ட மதுமதி மட்டும் கைமாறிப்போவது கவலைதந்தபோதும் குலமறியாத சந்தியாவை தன் மகனுக்காக ஏற்றிருக்கும் அந்த நற்பண்பை எண்ணி மாமா கூட உள்ளூர மகிழ்ந்து தன் மனைவியின் பெருந்தன்மையை பார்த்து வியந்தார்.. அந்த சமயத்திலே பொன்னுருக்கு வைப்பதற்கான திகதியும் தெரிவிக்கப்பட்டு அதன் பின் இருவரும் கல்யாணம்வரை ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது என்றும் அறிவுரை கூறினார்.

இவ்வாறாக எல்லோரும் கலகலப்பாக பேசியபடி பரிமாறப்பட்ட வனிலா ஜஸ்கிறீமை சுவைத்தபடி இருந்தனர். இவர்கள் கதைக்கும் சத்தத்தைக்கேட்டு பக்கத்து மாமியும் தான் செய்த அல்வாத்துண்டுகளோடு வந்ததும் வராத துமாய் „“ என்ன ஒரே அமர்க்களமாக இருக்கு.. அடி ஆத்தி யாரிந்த பொண்ணு… புதுசாக இருக்கே..“ என்றபடி.. “ மதும்மா இந்தாம்மா ஆத்திலை இன்னைக்கு கொஞ்ச அல்வா செய்தேன்.. எனக்கு ஒரு காப்பி எடுத்து வாம்மா.. என்றபடி அமர்ந்தார்.. சங்கரின் தாயார் சந்தியாவை வருங்கால மருமகள் என அறிமுகப்படுத்த““ இதென்ன குத்தாட்டமாய் கையிற்குள் மருமகளை வைத்திட்டு ஏனிங்கு புதுசா?என்ன கலிகாலம்… இளசுகள் ஆளை அடிக்கடி மாத்துற காலமாச்சே.. எங்களுக்கு கல்யாணசாப்பாடு வந்தாப்போதும்..“ என அங்கலாய்ப்புடன் பேசிமுடித்தார் தன் பாணியில்.

வீட்டில் கல்யாணம் களைகட்டத்தொடங்கியது.
மண்டபம் , மணவறை, அலங்காரம் தொடக்கம் சாப்பாடுவரை எல்லாம் ஓடர் கொடுத்தாகி விட்டது. மாமியின் மனதில் ஒரு திருப்தி.. மகனின் கல்யாணம் நின்று விடுமோ என்ற பயம் அகன்று இருந்தது.. இன்னும் ஒரேயொரு வாரத்தில் கல்யாணம் ..

அந்திவானம் மெல்ல சிவக்கத்தொடங்கியது.. கதிரவனும் மேகத்தினிடை மறைந்துகொண்டிருந்தான். சந்தியாவை கூட்டிக்கொண்டு மதுமதியும் போயிருந்தாள்..பக்கத்து வீட்டு மாமியும் கிளம்பி போயிருந்தார்.. சங்கர் தாயிடம் வந்து மெல்லக்கேட்டான் „“ என்ன அம்மா….மருமகள் எப்படி இருக்காள்? புடிச்சுதா? “ என்றபடி புத்தகங்கள் அடங்கிய பொதியை கொண்டுவந்து மேசைமீது வைத்தான்.. ஆவலோடு தாயார்““ மருமகள் நல்ல குணமுள்ள பிள்ளைபோல இருக்கு.. அதுசரி என்ன பெரிய பார்சல்?? என்றதும் “ அம்மா இது இரகசியமாகவே இருக்கட்டும் ., மதுவிற்கு தெரிய வேணாம் .. கல்யாணம் நடக்கும் நாளன்று வரவேற்புபசாரத்தில் மதுவின் கவிதைகளின் தொகுப்பை நூலாக வெளியிடப்போகிறேன்…இது நான் அவளுக்காக கொடுக்கும் பெறுமதியான பரிசு…இதைப்பற்றி இப்போ எதுவும் சொல்லமாட்டேன்.. பொறுத்திருங்க அம்மா..““என சிரித்தபடி கூறினான்.. தாயாருக்கோ தன் கண்களையோ காதுகளையோ நம்ப முடியவில்லை.. தன் மகனா இப்படி பேசுவது?? அவனுக்குள்ளே எத்தனை மாற்றங்கள்..கவிதைகள், கதைகள் என ஆர்வமும்… தமிழ்பற்றும் எப்படி வந்தது??
கேள்விக்கு விடை சொல்வதுபோல் அந்த மரக்கிளையில் இருந்த குருவி கத்தியபடி பறந்து சென்றது….

( தொடரும்)
ரதிமோகன்