மனம் வாடும் நேரம் எல்லாம்!கவிதை நகுலா சிவநாதன்

மனம் வாடும் நேரம் எல்லாம்
உன் அன்பை அடிக்கடி
நினைக்குதே என் மனம்
கணம் மாறும் காலநிலையாய்
உன் மனம் மட்டும் ஏன் மாறுகிறது?

தினம் தினம் உன்னை நினைத்த மனம்
திடீரென உன் மாற்றம் கண்டு துன்புறுகிறது
காரணம் பல வரைந்தாலும்
கொண்ட காதல் மட்டும் ஏனோ
ஏற்க மறுக்குதே!

நம்பிக்கை என்ற நாற்று உனை சுற்றி வளர
அவநம்பிக்கையாய் அறுத்தெறிவது தகுமோ?
செல்லமாய் உன்னில் கொண்ட செதுக்கிய ஓவியம்
செல்லரித்த தென்றலாய் காற்றில் பறக்குதே!

கண்ணே! என் தென்றலின் பரிசமே
மௌனத்தின் மனத்துளியில் என் கண்ணீரின் காவியமாய்
மனம் வாடும் நேரமெல்லாம்
உன் குரல் கண்டு மகிழ்வு அடையுதே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்