**மாய்ந்து ஓய்ந்து போகிறோம்***

மனிதர்களுடைய வாழ்விலே
மட்டும் தான் குடும்ப பாரமா?
மரத்துக்கிளிகள் நாங்களும் தான்
மாய்ந்து போகிறோம் அதனாலே.
மழை வெயிலுக்கு பாதுகாப்பான
மரப்பொந்தை தேடிப்பிடித்து ,பின்
மனத்துக்குப்பிடித்த இணையை சேர்த்து ,
மசக்கை காத்து ,முட்டையிட்டு அதை
மண்டியிட்டு அடைகாத்து, காவலிருந்து,
மழலைத் தவ்வல்களை வளர்க்க
மரண பயத்தோடு நாளெல்லாம்
மாறி மாறி குஞ்சுகளுக்கு இரைதேடி,
மரக்கிளையில் எம்பிஞ்சுகளோடு
மகிழ்ந்திருக்க பயந்தொழிந்து,
மாயவேடரின் வலைக்கு ஒதுங்கி,
மற்ற மிருகங்களின் பார்வைக்கு விலகி,
மழலைக்கிளிகளுக்கு பறப்பு பழக்கி ,
மனத்துணிவுடனவை விடைபெறுகையில்
மரத்துக்கிளிகளாகிய நாங்களும்
மாய்ந்து ஓய்ந்து போகிறோமையா…

கிளி நேசன்.