வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

செஞ்சோலை நினைவுகளோடு யாழ் நூலகத்தில் நடந்தேறிய வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மாணவியாக வளர்ந்த வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டும் சுடுகலனாய்..‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 12.02.2018 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு ஈழத்தின்யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடரேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி கதுர்க்கா வழங்கினார். வரவேற்புரையினை எஸ்.வி.இந்திரகலா வழங்கினார். யோ.புரட்சி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆற்றினார். வாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வழங்கினார். தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு அதிதியான ஊடகவியலாளர் யாழ் தர்மினி பத்மநாதன் அறிமுகவுரை வழங்கினார். தொடர்ந்து நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரின் புதல்வர்களான பரணிகன், சுகநிதா ஆகியோர் வெளியிட, திருமதி பற்றிக் அல்பேர்ட் திரேசாராணி மற்றும் அஸ்வின் சுதர்சன் லோஜனா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கிருபா லேணர்ஸ் உரிமையாளர் கிருபாகரன், ராஜா ஹவுஸ் உரிமையாளர் சண்முகானந்தன் ஆகியோர் கெளரவப் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து யாவர்க்கும் நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பரணிகன் நடனம் வழங்கினார்..

நூலின் ஆய்வுரையினை அறிவிப்பாளர் பிரியமதா ஆற்றினார். பிரதம அதிதி உரையினை, நிகழ்வின் பிரதம அதிதியான படைப்பாளி வெற்றிச்செல்வி ஆற்றினார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா வழங்கினார்.

செஞ்சோலை மாணவியாக வளர்ந்த சஞ்சிகா யாழ்.பல்கலைக்கழக பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் புலம்பெயர் உறவுகள் மற்றும் மலையக உறவுக்கும் ஆர்வத்தோடு கலந்துகொண்டமை இன்னொரு சிறப்பம்சம் ஆகும். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 1993இல் அன்னை பூபதி நினைவு பொது அறிவுத் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

+18