வலிக்கிறது மனது!கவிதை மன்னார் பெனில்

வலிக்கிறது மனது
மரணத்தை வெல்லும்
சக்தியும் இல்லை
அதை மனமுவந்து ஏற்கும்
மனநிலையும் இல்லை

உயிரிழையில் ஓரிழை
அறுந்துபோனதினால்
அங்கக்குறைவோடு
அவதாரப்பயணம்

தேகம் நொறுங்கிய பின்னும்
யோகம் அடித்தது உன்னால்
காலைமுதல் மாலைவரை
தாயின் மடியில் அமர்ந்து
இருப்பதுபோன்ற சுகமான உணர்வு
உன்மீது அமர்ந்து இருக்கும்பொழுது

காற்றுப்போன உன்னில்கூட
கல்மனதோடு எந்தன்
பயணம் தொடர்ந்திடும்
ஓரடி நடக்கமுடியாத என்னை
பல மையில் தூரம்
அழைத்துச்செல்வாய்
தனிமையை விரும்பாத எனக்கு
என்நேரமும் துணையாக
நீயே அருகிருப்பாய்

சிறுபிள்ளைபோல சிலநேரம்
சிறுநீர் இருந்துவிடுவேன்
வயிற்றுப்போக்கு வந்துவிட்டால்
என்னைப்போல பலமுறை
நீயும் குளிப்பாய்

கூடப்பிறந்தவர்களே
என்கூட வராதபோதும்
என்னோடு வரும்சொந்தம் நீ

உருக்குலைந்த எந்தன்
தேகத்தின் உயிர் பிரிந்தபின்னே
உன்னைப்பிரிந்து நானும்
என்னைப்பிரிந்து நீயும்
படும்துயர் நம்மையன்றி யாருக்குத்தெரியும்…..?

ஆக்கம் மன்னார் பெனில்