வெள்ளியில் ஒரு திருக்குறள்…

“ மங்கலம் என்பமனைமாட்சி;
மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள்
பேறு“

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் போலாகும் என வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார்.

வாழ்க்கை துணையாக நல்ல குணமும் பண்பும் உடைய மனைவி கிடைத்துவிட்டால் இல்லறம் செழிப்பாகும்.. அங்கு சந்தோசப்பூக்கள் புதிது புதிதாக மலர்ந்து மணம் பரப்பும். இல்லாவிட்டால் என்னதான் இருந்தாலும் அவன் வாழ்வே வீணாகிவிடும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொல்வர் . மறுப்பதற்கில்லை. அதே போல அழகான நல்ல பிள்ளைகளை பெற்றெடுக்கும்போதுதான் பெண்ணும் முழுமையடைகிறாள். அந்த இல்லறமும் மேலும் சிறப்பாகி ஒளிமயமாகிறது..
எது எப்படியோ இல்வாழ்க்கைக்கு ஒரு நல்ல பண்பான ,அன்பான பெண்ணால் மட்டுமே ஒளிகொடுக்க முடியும்…

அப்போது ஆண்கள் எப்படியும் இருக்கலாமோ என நீங்கள் கேட்பது கேட்கிறது. நிச்சயமாக ஒரு நல்ல பெண்ணால் எந்த ஆண்மகனையும் குடும்பத்திற்கு ஏற்றவனாக மாற்றமுடியும். பெண்களிடம் அந்த அபாரசக்தி இருக்கிறது.. அதுதான் பெண்ணை அன்னைபராசக்தியின் வடிவாக பார்க்கிறோம்.. நல்ல அன்பான பண்பான கணவன் கிடைக்கும்போது இல்லறம் சிறக்கும் இல்லையா?? நல்ல கணவன் அமைவதும் வரம்…
இல்வாழ்க்கையில் இன்பம் ஒன்றே பொங்கட்டும்.. நாட்களெல்லாம் இனிமையாகட்டும்..

அன்போடு
ரதிமோகன்

Merken

Merken