அன்புத் தாயே..

நீ என்னை
சுமந்த வலி
நான் அறியவில்லை தாயே..
உன்னை
சுமந்து கொள்ள
முடியவில்லையென்று அழுகிறேனே ..

நீ பாதியிலே விட்டு சென்று
நான் பாவியாகி வாடுகிறேன்
பாசம் என்ன விலையென்று
இந்தப் பார் முழுதும் தேடுகிறேன்

பெற்றவளின் அருமை
நான் ஒற்றையாகி உணர்ந்தேனம்மா..
உற்றவர்கள் இருந்தும்
நூலறுந்த பட்டம் போலானனம்மா..

என்னை பெற்ற பலன்
அடைந்தாயோவென்று
ஒரு குற்ற உணர்வு என்னைக் குடையுதம்மா..
நித்திரையில் நித்தம் வந்து உன் நினைவு என்னில் உறையுதம்மா..

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு உண்மை தாம்மா..
நீ இல்லாத உலகில் ..
என் மொத்த உடலும் ஒரு கல்லுதாம்மா..

நீ ஊட்டிய பால் தான்
உடலில் இன்னும் குருதி..
நீ தாலாட்டிய பாட்டு
என் செவிகளில் இன்றும் சுருதி..
என்னைப் பாராட்டிய பாசக்குருவி..
இன்று உன்னைக் காணாது எந்தன் கண்ணுமானது அருவி..

உலக தாய்மொழி தினமாம் தாயே..
எனக்கு முதல் மொழி கற்றுத் தந்த உயிர்மொழி நீயே..
எனை விட்டுப் பிரிந்ததில் உன் நினைவுகள் வலிகளில் தாயே..

மகனாக..
கவித்தென்றல்