அன்றும் இன்றும்!கவிதை யோ புரட்சி

05.02.2011 அன்று காலை 08.50 மணிக்கு இலங்கையின் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மருத்துவமனையில் வைத்து எழுதியது.

முதன்முதல் என்னை
பெண்தேடி வந்தபோது
முழுமதி ஒத்த
முழுமையழகி நான்.
அழகு இருந்து
ஆவதுதான் என்ன?
சீதனம் இல்லாததால்
சிதைந்து போனது
திருமணப் பேச்சு.

சில வருடங்கள் உழைத்து
சீதனம் சேர்த்தார் அப்பா.
தேவையான சீதனம்
சேர்ந்தது கையிற்கு.

பார்ப்பதற்கு இப்போதும்
பலர் வருகிறார்கள்.
சீதனம் திரளாய் இருப்பதை
சிரித்த முகத்தோடு
உரைக்கிறார் அப்பா.
வருபவர்களோ என்
வயதின் எண்ணிக்கையை
பார்க்கத்தொடங்கி விட்டார்கள்.

ஆக்கம் யோ.புரட்சி,