அரங்கியல் கலை நாடக தின நல் வாழ்த்துகள்(குமாரு. யோகேஸ்)

அரங்கியல் கலை செயற்பாட்டார்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் என் இனிய உலக நாடக தின நல் வாழ்த்துகள்

தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பகுதிகளை உடையது. இது உலகின் வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பு ஆகும். எனவே தமிழை முத்தமிழ் என்றும் அழைக்கலாம். இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

நாடகம் என்னும் சொல்லை நாடு + அகம் எனப் பிரிக்கலாம். நாட்டை அகத்தில் கொண்டது நாடகக் கலை. நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப்பெயர் பெற்றது என்றும் கூறலாம்.

நாடகக் கலை என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி ஆகும். கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டியும், கூத்தாக ஆடிக்காட்டியும் நாடகம் நடத்தப்படுகிறது. இதற்கு கூத்துக்கலை என்ற பெயரும் உண்டு.

தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகக் கலை ஆகும். பிறர் செய்வதைப் போலத் தாமும் செய்து பார்க்க வேண்டும் என்கின்ற மனித உணர்ச்சியே நாடகம் தோன்றக் காரணமாகும். போலச் செய்தல் பண்பு நாடகத்திற்கு அடிப்படையாகும்.

உயிரற்ற பொருள்களை வைத்து விளையாடிய விளையாட்டு, படிப்படியாக வளர்ச்சியடைந்து, உயிருள்ள மனிதர்களையே வேடம் புனையச் செய்து ஆடிப்பாடி நடிக்க வைத்தது.

பாவைக்கூத்து முதல் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்த நாடகக் கலை, நாட்டியமாகி நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் புதிய நாடக உலகில் அடியெடுத்து வைத்துள்ளது.

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புக்கள்

நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் என்ற நூல் இலக்கணம் வகுத்துள்ளது. திருக்குறளிலும் நாடக அரங்கம் இருந்த செய்தியை கூத்தாட்டவைக் குழாத் தற்றே என்ற குறளின் மூலம் அறியலாம். இளங்கோவடிகள் மாதவியை நாடக மேத்தும் நாடகக் கணிகை என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

தனிபாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதைக்கு அதற்கு ஏற்றவாறு வேடம் அணிந்து ஆடுவதை நாடகம் என்றும் கூறிவந்துள்ளனர். நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் கூத்து என்னும் சொல்லே வழக்கில் இருந்துள்ளது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூத்து வகைகளைப் பற்றியும், நாடக நூல்கள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்

விளக்கத்தூர் கூத்து, குணநூல், கூத்து நூல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முறுவல், சயந்தம், செயிற்றியம் போன்ற நூல்கள் நாடகத்திற்கும், நாட்டியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளன. சிலப்பதிகாரம் நாடகக்கலை பற்றியும், காட்சித் திரைகளைப் பற்றியும், நாடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாகக் கூறியுள்ளது.

பரிதிமாற்கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் என்னும் நூலில், நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்புக்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் பற்றி கூறியுள்ளார்.

சுவாமி விபுலானந்தர் எழுதிய மதங்க சூளாமணியும் மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும். தொழில்முறை நாடக அரங்குகள் பற்றிய செய்திகளை பம்மல் சம்பந்தனார் நாடகத்தமிழ் என்னும் நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நாடகக்கலை வளர்ந்த பாதை

ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். பதினோராம் நூற்றாண்டில் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களால் கோவிலில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. குறவஞ்சி நாடகங்கள் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் தோன்றின. பள்ளுவகை நாடகங்கள் உழவர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன் ஒழுக்கங்கெட்டு நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராமநாடகம், கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன. இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன.

ஊர்களில் தெருக்கூத்து என்னும் நாடக வகை புராணக் கதைகளையே மையமாகக் கொண்டு நடத்தப்பெற்றது. பின்னர் நாடகங்களில் உரையாடல் சிறப்பிடம் பெற்றது. விடிய விடிய நடைபெற்ற நிலைமாறி நாடகங்கள் மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டன.

19ம் நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றது. காசி விசுவநாதன் டம்பாச்சாரி விலாசம் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி.பி. 1891ல் வெளியிட்டார்.

நாட்டு விடுதலை போராட்டக் காலகட்டத்தில் பல்வேறு தேசிய நாடகங்கள் அரங்கேறின. கதரின் வெற்றி நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பெற்ற தேசிய சமூக நாடகமாகும். இதனைத் தொடர்ந்து தேசியக் கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பெற்றன. நாடக மேடைகளில் தேசியப் பாடல்கள் பாடப்பெற்று மக்களிடம் சுதந்திர போராட்ட உணர்வை தூண்டப்பட்டன‌.

இருபதாம் நூற்றாண்டில் நாடகத்துறையில் பெருந்தொண்டு ஆற்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள் இவர் நாடக உலகின் இமயமலை என்று சிறப்பிக்கப்பட்டார். பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாடகத் தந்தை எனப்போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாகத் தமிழ்நாடக மேடையில் புகழ்பெற்று விளங்கியது. தமது நாடக அனுபவங்களை எல்லாம் நாடக மேடை நினைவுகள் நாடகக் கலையில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது என்னும் தலைப்புகளில் எழுதியுள்ளார். இவை நாடகம் பயில்வோர்க்கு பெரிதும் பயன்படுபவையாகும்.

மதுரையில் 1942ல் தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் அரங்கேறியது. அதில் ஒளவையராக நடிக்கும் வாய்ப்பை பெற்று சிறந்த முறையில் நடித்தார் தி.க.சண்முகனார். இவரை ஒளவை சண்முகனார் என்றே அழைத்தனர்.

நாடகங்கள் வாயிலாகப் புலப்படுத்தப்பட வேண்டியவை

கலை என்பது ஆக்க வழியில் செல்லுதல் வேண்டும். கலைஞன் ஆக்கத்திற்காகவே வாழ்கிறான். மக்களின் நலன் கருதியே கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் வேண்டும். நாடகக் கலையின் மூலம், புதுமைக் கருத்துகள் அல்லது மறுமலர்ச்சிக் கருத்துகள் பார்ப்பவர் உள்ளத்தில் பதிய வைத்து அதற்கு ஏற்ற முறையில் செயலாக வெளிப்படுத்த செய்தல் வேண்டும்.

உயிர்களிடத்தில் அன்பு, உறுதியான நெஞ்சு, தெய்வபக்தி, உயர்ந்த எண்ணங்கள் இவற்றை எல்லாம் நாடகம் வழியே கற்பித்தல் வேண்டும்.

மக்களின் கண்ணினை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதையழகோடு கவிதையழகும் கொண்டு மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்