அவள் என் கவிதை…

அவள் என்ற அந்த உயிர்
ஏதோ ஒரு ஏகாந்தமாய் 
என்னைத் துளைக்கிறது.

இராஐ வீதியில் யாவையும் விலக்கி
நான் ஒருவனாய் நின்று 
காதல்த் தேர் இழுக்கிறேன்.

வலிமைகள் வடத்தில்
வரைவிலக்கணம் எழுதுகின்றன.
பீடத்தில் அவள் தரிசனம்
என்னை பூஜைப் பூ ஆக்குகிறது.

வேண்டுதல்கள் எல்லாம்
அவள் வேர்களில் உரமாகிறது.
கச்சேரி ஒலிகள் கவியெழுதி
அவளைக் காவியமாக்கிறது.

இதழ் முத்த ஈரத்தில் 
உயிர் மூச்சு நீச்சலடிப்பதை 
என் ஒரு தலை ராகம்
உயில் எழுதிக் கொள்கிறது.

பாத்திரம் தேய்க்கும் 
சாம்பல் அல்ல என் காதல்.
கலைத் தாய் வீற்றிருக்கும் 
ஆம்பல் என்கிறது ஆண்மை.

எறும்புகளின் வரிசையில்
என்னாசை ஒற்றுமை கொள்கிறது.
நிறங்களைத் தேடும் போது
அவள் சிரிப்பு சிவக்கிறது.

பார்வைப் பகுரொளி தோன்ற
அவள் வானமாகிறாள்.
பாதையில் நடந்தபடி பாடுகிறேன்.

பாடும் குயில் என்கிறது காதுகள்.
பைத்தியம் என்கிறது கண்கள்.
உயிர் மொழி என்கிறது வாய்கள்.
காதல் வாழ்க…

கலைப்பரிதி