இதயம் என்றொரு ஏடெடுத்தேன்…. – இந்துமகேஷ்

என் எழுத்துப் பயணத்தில்…..
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்….
– இந்துமகேஷ்
அது ஆண்டு 1971.
இருபத்திரண்டே வயதான இந்த இளைஞனுக்கு இலக்கிய இதழ் ஒன்றினை வெளியிடும் எண்ணம் உதித்தது.
மாணவப் பருவத்தில் இவன் எழுதிய சில கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் இலங்கைவானொலியில் ஒலிபரப்பானதும் இவனது எழுத்தைப் பாராட்டி வாசகர்கள் வாசகிகள் சிலர் கடிதங்கள் வரைந்ததும் இவனது சிற்றிதழ் தாகத்துக்கு உற்சாகபானம் வழங்கி ஊக்குவித்திருந்தன.
இதயம் என்னும்மகுடம் சூட்டிக்கொண்டு மாத சஞ்சிகையாக மலர்ந்த அந்தக் கலை இலக்கிய இதழின்
முதல் இதழ் கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட போதும் அதன் முதல் இதழ் இவனது தாய்மடியான புங்குடுதீவிலிருந்து வெளியாகவேண்டும் என்று இவன் விரும்பினான். கொழும்பிலும் ஊரிலும் இருந்த இவனது நண்பர்களோடு கலந்தாலோசித்து ஊரில் பெரிய அளவில் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான்.
1971 சித்திரைத் திங்களில் இதயம் முதலாவது இதழ் வெளியிடுவதாக முடிவாயிற்று.
கொழும்பிலிருந்த சில நண்பர்களுடன் விழாநிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்துகொண்டு
முதல்வாரத்தில் இதயம் இதழ்களுடன் அவன் ஊருக்குப் பயணமானான்.
நண்பர்கள் அடுத்த வாரம் ஊர்வருவதாக முடிவாயிற்று.
1971 சித்திரைத் திங்கள் இரண்டாவது வாரத்தில் வெளியீட்டுவிழா நிகழவிருந்தபோது
இவன் ஊர் வந்து சேர்ந்த முதல்வாரத்தின் இறுதிநாட்களில் சிங்கள அரசுக்கெதிரான சிங்கள
இளைஞர்களின் ஆயுதப்புரட்சி வெடித்தது.
நாடு அமைதியிழந்த சூழலில் இதயம் வெளியீட்டு விழாவும் எண்ணம்போல நிகழாது போயிற்று.
எனினும் இதயம் அமைதியாகத் தனது கலை இலக்கியப் பயணத்தைத் தொடங்கிற்று.
நாடு அமைதிநிலைக்குத் திரும்பும்வரை யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு இதயத்தை வெளியிடும் எண்ணத்தோடு, இதயம் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு புங்கையூர் சி.மகேஸ்வரன் என்ற இந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில் கால் பதித்தான்.
ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்று இன்று புகழப்படும் தி.ச.வரதராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் அவர்களைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்பு இவனுக்கு அங்கே கிடைத்தது.
அவருடைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரது அறிமுகமும் அவர் மூலமாக அவனுக்குக் கிடைத்தது.
இதயம் தனது இலக்கியப் பயணத்தை உற்சாகமாகத் தொடரலாயிற்று.
அகஸ்தியர், மு.த. எஸ்.பொ. மு:நேமிநாதன் மு.பொ. என். கே.மகாலிங்கம் சு.வில்வரத்தினம், தம்பியையா தேவதாஸ், கோப்பாய் சிவம், நெல்லை க.பேரன். திக்குவல்ல கமால், மு.புஷ்பராஜன், ஐ.சாந்தன், டேவிட் ராஜேந்திரன், காசி ஆனந்தன், இராஜம் புஷ்பவனம், சௌதாமினி, நந்தினி சேவியர், இரசிகமணி கனக செந்திநாதன், செ.சிவநாதன், நாகேசு தர்மலிங்கம், பாலமுனை பாருக், எம்.எஸ்.எம்.ஜின்னா, இவர்களோடு இன்னும் பலர் என்று மிக நீண்ட எழுத்தாளர் பட்டியல் இதயத்திடம் உண்டு. அவர்களது எழுத்துக்களால் இதயம் ஒரு தரமான சஞ்சிகையாக மிளிர்ந்தது.
இதயம் இரண்டாவது இதழிலிருந்து தொடர்ந்து ஆனந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டம் ஈழத்துச் சிற்றிதழ்களின் வசந்தகாலம் என்று எண்ணத்தக்க வகையில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன.
ஓராண்டாகத் தொடர்ந்த இதயம் இதழின் வருகை 1972 சித்திரைத்திங்களில் புங்குடுதீவில் நடைபெற்ற அதன்
ஓராண்டு நிறைவுவிழாவுடன் நிறைவுகண்டது. ஆனாலும் அதில் எழுதிய புதுமுக எழுத்தாளர்கள் பலர் பின்நாட்களில் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக உலாவந்தனர்.
புங்கையூர் மகேஸ்வரன், ரஜனிமணாளன், இளந்தீவகன் என்று பல பெயர்களுக்குள் எழுதிக்கொண்டிருந்த நானும்
வீரகேசரி பிரசுரமாக வந்த எனது நவீனத்துக்காக இந்துமகேஷ் என்று பெயர்மாறினேன்.
மகேஸ்வரன் என்ற பெயர் மறைந்து இந்துமகேஷ் என்ற பெயரே எழுத்துலகில் நிலையாயிற்று.
நியூவேவ் என்கின்ற புதியஅலையொன்று எழுத்துலகில் வீசத்தொடங்கிய பொழுதுகளில் என்னையும் நியூவேவ்
எழுத்தாளன் என்று வீரகேசரி அறிமுகப் படுத்தியதாலோ என்னவோ நமது இலக்கிய எழுத்தாளர்கள் சிலர் என்னை
ஜனரஞ்சக எழுத்தாளர் பட்டியலுக்குள் தள்ளிவிட்டார்கள். எனினும் வாசகர்கள் என் எழுத்தின்மீது கொண்டிருந்த அபிமானம் எனக்கு வியப்பளித்தது.
புலம்பெயர்ந்த பின்னால் நான் சந்தித்த எனது வாசகர்கள் பலரும் நல்ல படைப்பாளர்களாகவும் இலக்கியரசனை உள்ளவர்களாகவும் இருந்ததில் மனம் பூரித்தேன். அவர்களது படைப்பாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டும்
என்ற எனது பேரவாவின் வெளிப்பாடே பூவரசாக மலர்ந்தது.
„இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்.“
-இது இதயத்தின் வாசகம்
„உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்“
-இது பூவரசின் வாசகம்.
1971 -1972 இதயம்
1991- 2008 பூவரசு