இலக்கை நோக்கி…

இந்த உலகம்
இயங்கும் வரையில்
இங்கே நல்லவர்களும்
கெட்டவர்களும் இயங்கி
கொண்டுதானிருப்பர்…
அறிவுரை சொல்லும்
ஆசான்களும் தம் பணியில்
தீவிரமாகவே இயங்குவர்
அதனை கேட்பவரும்
கேளாதவரும் இல்லாமலில்லை.
உலக வாழ் மக்கள்
குடை ஒன்றின் கீழ்
நிற்க போறவர்களுமல்ல
அவர்களை மாற்றிட
முடியாததும் உண்மையே..
ஆனாலும் தீயவர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்க விடாமல்
காப்பதும் காலத்தின் கடனே.
புத்தன் இயேசு காந்தி
சொல்லித் திருந்தாத உலகில்
இவன் எம்மாத்திரம்.
மத சித்தாந்தங்களும்
கோட்பாடுகளும் பைபிளிலும்
திருக்குரானிலும் கீதையிலும்
எழுதி வைத்ததை எளிமையாக்கி
கவிதைகள் காவியங்கள்
நாவல்கள் நாடகங்கள் என
நாமும் சொல்ல முனைகின்றோம்.
முகநூல் விருப்பின் எண்ணிக்கைகளுக்கோ
வெறும் வெற்று விலாசங்களுக்கோவல்ல
விரும்பின் கோவில் பிரசாதமாக
தொட்டு வையுங்கள் கைகளை
தட்டிச் செல்வதோடு கிடைத்த
வாழ்க்கையையும் வெல்லுங்கள்.

கவிஞர் .ரி.தயாநிதி