எல்லாவற்றின் மேலும் இடி விழ…..சாம் -பிரதீபன்

கலாசாரம் என்பதை
மீண்டும் மீண்டும்
பெண்களின் குட்டைப் பாவாடைகளுக்கு கீழேயிருந்தும்,
கழுத்திறங்கிய மேற்சட்டைக்கு மேலேயிருந்தும்,
கோவில்களில் விரித்துவிடப்பட்ட கூந்தல்களின்
உள்ளேயிருந்தும் தான்
தேடிப்பிடிக்கப் பார்க்கின்றோமா?
பெண்கள் என்ன
வாழப்படாத கலாசாரத்தைக் காட்சிப்படுத்தும் சிற்பங்களா?
„மக்கா“ அவளுக்கு முக்காடு போட்டது.
„சிலுவை“ அவளுக்கு துப்பட்டி போட்டது.
„சூலம்“ அவளைத் துடக்கு என்று சொன்னது.
எல்லாவற்றின் மேலும் இடி விழ…..

– சாம் பிரதீபன் –