ஏங்கி ஏங்கி இறவாதே .

ஏழை கேட்டால் எதுவும் இல்லை
அதுதான் சமூக ஏற்பாடு
மூளை உள்ளவர் பறித்தே எடுப்பார்
இதுதான் இங்கு கோட்பாடு .

தானாய் கிடைக்கும் என்பது எல்லாம்
வாழ்க்கைக்குதவா வேதாந்தம்.
வீணாய் காலம் கழித்து நடந்தால்
வீதியில் தள்ளும் நிர்ப்பந்தம் .

வலியோர் கேட்டால் வாரி வழங்கும்
வக்கிர உலகம் மறவாதே.
எலியாய் நினைத்து ஏழ்மையில் துடித்து
ஏங்கி ஏங்கி இறவாதே .

கோழிகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தால்
கோட்டானும் கூட நெருங்காது .
வேலியைப் போட்டு விளைச்சலைக் கூட்டு
வேதனை வந்துள்ளம் நொறுங்காது .

கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்