ஒரே ஜாதி…கவிஞர் தயாநிதி

 

நிலையில்லை
உறுதியில்லை
ஆனாலும்
பூக்கள் புன்னகைக்க
மறப்பதில்லை…

அழகாலும்
நறு மணத்தாலும்
அழிவும் ஆபத்தும்
தமக்குண்டு எனும்
நிலையறிந்தும்
வருந்துவதில்லை..

வாழும் காலம்
குறுகியதெனினும்
வாழும் வரை
மனங்களை அழகு
படுத்தும் தன்மையில்
மாற்றமில்லை..

நகைச்சுவை
கலைஞர்களும்
அத்தகையவர்களே.
சிரிப்பை சீதணமாக்கி
சிரிக்க வைப்பதை
பாரிய பணியாக்கி
பம்பரமாய் சுழலுவர்…

சிரிப்பை மறந்த
சிங்காரச் சீமையிலே
அலுப்பை மறந்து
அடிக்கடி பயணித்து
நகைச்சுவை ஏர் கொண்டு
மனித மனங்களை
உழும் பணி சிறப்பானது…

பூக்களும் இவர்களும்
ஒரு ஜாதி..வாழும்
காலம் கணக்கிலில்லை.
ஆனாலும் பூப்பதிலும்
புன்னகைக்க வைப்பதிலும்
இவர்களுக்குள்
இடரேதும் இருப்பதில்லை..

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken

Merken