ஒவ்வொரு மணித்துளியும்!கவிதை நகுலா சிவநாதன்

ஒவ்வொரு மணித்துளியும்
உன் ஞாபகம் நெஞ்சில் துளிர்க்கிறது
காணத்துடிக்கும் பொழுதுகள்
களிப்பின் வனப்புகள் ஆகின்றன

என் உள்ளம் கவர்ந்த தென்றலே!
மெல்லமாய் மனதும் மேனியை சிலிர்க்க
காதலின் உணர்வும் களிபேருவகை கொள்ள
செல்லக்காதல் தேடுது உன்னை

கண்ணின் துடிப்பும் மின்னி எரியும் ஒளியும்
உன்னை எண்ணி ஏங்குது இதயத்தின் அடியில்
ஊசலாடும் உன் உணர்வு பறக்கும் இறகுபோல்
பரவசமாய் உலா வரத் துாண்டுதே!

மனசுக்குள் வருவாயா மன்மதனே!
மனசெல்லாம் மழைதான்
நீ பார்க்கும் ஒவ்வொரு துளியும்
ஓராயிரம் பார்வையைத் துாண்டுதே!
என் இதயத்தில்!

 ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்

Merken