கலைப்பீட மாணவி டிலக்சனா செல்வராசா படைத்த ‚ஈழவாடை‘ நூல் வெளியீட்டு விழா.

யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்தேறிய கலைப்பீட மாணவி டிலக்சனா செல்வராசா படைத்த ‚ஈழவாடை‘ நூல் வெளியீட்டு விழா.

கற்றுக்கொண்டிருக்கும்போதே நூலினை வெளியிடுவது ஒரு திறனும், தேர்ச்சியும்தான். ஈழத்தின் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலைப்பீடத்தில் பயிலும் மூன்றாம் வருட மாணவி டிலச்ஷனா செல்வராசா எழுதிய ‚ஈழவாடை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 26.09.2018 புதன்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு யாழ்.பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஆரம்பமானது. முன்னதாக விருந்தினர்கள் வரவேற்பு இடம்பெற்றது. நிகழ்விற்கு பல்கலைக் கழக தமிழியற் கழக உப தலைவர் சிந்துஜா தவராசா தலைமை வகித்தார். யாழ்.பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். நூல் வெளியீடு:படைப்பாளிகள் உலகம்.

சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை நுண்கலைப்பீட 03ஆம் வருட மாணவிகள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை பல்கலைக்கழக மாணவி கஸ்தூரி வழங்கினார். வரவேற்புரையினை தமிழியற் கழகத்தினைச் சேர்ந்த இ.டியூன் திவ்யா வழங்கினார். வாழ்த்துரையினை யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதி வே.சாரங்கன் வழங்கினார்.
தலைமையுரையினைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை வவுனியா ‚தமிழ் விருட்சம்‘ செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார். நூலினை யாழ்.பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் வெளியிட முதற்பிரதியினை கிருபா லேணர்ஸ் அதிபர் தொழிலதிபர் ‚சமூக திலகம்‘ அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூற்பிரதிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து யோ.புரட்சி வாழ்த்துதல் வழங்கினார். யாழ்.பல்கலைக் கழக தமிழ்த்துறைக்கு யோ.புரட்சியால் நூல் அன்பளிப்புச் செய்யப்பட்டதோடு, அனைத்துலக ‚பேசு தமிழா பேசு‘ போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.பல்கலைக் கழக மாணவி சிந்துஜா தவராசா, நூலாசிரியர் டிலக்சனா செல்வராசா ஆகியோருக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிப்பும் செய்யப்பட்டது.

நூலின் ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் ‚செந்தமிழ்ச் சொல்லருவி‘ ச.லலீசன் நிகழ்த்தினார். பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் வழங்கினார். வவுனியா ‚தமிழ் விருட்சம்‘ அமைப்பினரால் நூலாசிரியருக்கான கெளரவிப்பு அளிக்கப்பட்டது. கிளிநொச்சி சிவபாத கலையகம் அ.த.க பாடசாலை அதிபர் பரமேஸ்வரி சோதீஸ்வரன் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

நன்றியுரையினை யாழ்.பல்கலைக் கழக தமிழியற் கழகச் செயலாளர் ரா.பிரவீனா வழங்கினார். நூலினை வெளியீடு செய்த டிலக்சனா செல்வராசா எற்கனவே பலகலைக் கழகத்தில் வைத்து ‚சபிக்கப்பட்ட பூ‘ எனும் நூலினையும் வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.