காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை !

புலரும் விடியல்களில்
புதுமைகள் பூத்திருக்க
பூவான வதனங்களில்
புன்னகை ஒளிர்ந்திடட்டும் !

நாளைய பொழுதுகள்
நமதாக மலர்ந்திட
நானிலமும் நன்மை பெற
நமது செயல் சிறக்கட்டும் !

தோல்விகள் உரமாக
வெற்றிச் செடி தழைத்திட
வேகத்திலும் விவேகத்திலும்
வீரம் மெருகேறட்டும் !

முயற்சிகள் முன்னேற
உயர்ச்சிகள் வளர்ச்சி காண
காலத்தின் தேவையறிந்து
கடமைகள் வலுப்பெறட்டும் !

கவலைகள் ஓய்ந்திட
கனவுகள் மெய்ப்பட
உன் கையை நீ நம்பி
உண்மையாய் உழைத்திடு !

இருப்பதைக் கொண்டு நீ
இயல்பாக வாழ்ந்திடு
இரப்போர்க்கு உதவிடு
இயன்றவரை பகிர்ந்து வாழ் !

காலங்கள் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
காலத்தை வென்றிட
கருத்தோடு செயற்படு !

– வேலணையூர் ரஜிந்தன்.