கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா.

ஈழத்தின் புதுக்குடியிருப்பில் நிறைவேறிய கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா.

ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் அதிக சிதைவினைச் சந்தித்த இடங்களில் புதுக்குடியிருப்பு மிகமுக்கியமானது. போர் முடிவின் பின்னர் சகல சமூகக் கட்டுமானங்களும் விரிவடையும் இங்கு இலக்கியப் பாய்ச்சலும் தொடர்கின்றமை திருப்தியே. ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மந்துவிலைச் சேர்ந்த படைப்பாளர் அருள்தாஸ் கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 03.03.2018 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு மந்துவில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் ஆரம்பமானது. குறித்த நேரத்தில் நிகழ்வு தொடங்கியமை நன்றே. முன்னதாக பங்கேற்பாளர்கள் அழகிய கடதாசிப் பூச்செண்டுகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். நிகழ்ச்சியை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினைச் சேர்ந்த யே.சாந்தநேசன் தொகுத்தளித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஆசியுரையினை அருட்பணி செ.சுதர்சன் அடிகளார் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை மாணவிகளான அபர்னா, அர்ச்சனா ஆகியோர் வழங்கினர். வரவேற்புரையினை மந்துவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியர் சாந்தநாயகி வழங்கினார்.

தலைமையுரையினை நிகழ்விற்கு தலைமை வகித்த கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் உதவி விரிவுரையாளர் எஸ்.துஜான் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மேரிகமலா, யோ.புரட்சி, அ.ஜெயராஜ், ஓய்வுபெற்ற அரச அலுவலர் அற்புதராசா ஆகியோர் வழங்கினர். சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ கேசவன் சிறப்புரை நிகழ்த்தினார்.

நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவரும், வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலய ஆசிரியருமான சு.காண்டீபன், அருட்பணி செ.சுதர்சன் அடிகளார்,
ஆகியோர் வெளியீடு செய்ய முதற்பிரதியினை பிரான்ஸ் தேசத்தில் வசிக்கும் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த திரு திருமதி ஜோன்சன் றூக் இணையர் பிரதியைப் பெற்றனர். தொடர்ந்து யாவருக்கும் நூல் வழங்கப்பட்டது.

நூலின் மதிப்பீட்டுரையினை முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலை அதிபர் செல்வநாயகம் நிகழ்த்தினார். பிரதம அதிதி உரையினை வவுனியா நகரசபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவருமான சு.காண்டீபன் நிகழ்த்தினார்.
ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் கிளைம்சென்(நிது) வழங்கினார். இந்நிகழ்வில் மழலை ஹரிஷ்ணவி, மாணவிகள் தனுசியா, வினுசியா மற்றும் அர்ச்சனா, ஜெபன்சி ஆகியோரின் நடனக் காட்சிகளும் திறனோடு அரங்கேறியமை சிறப்பாயமைந்தது.

நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் நிறைவானது. திருப்தியான அளவு பங்கேற்பாளர்கள் நிகழ்வு முடியும்வரை கலந்திருந்தமை இன்னொரு பதிவே. ‚உணர்வுகளின் பாதை‘ கவிநூலும் தமிழுலகில் இன்று தன்னை இணைத்துக்கொண்டமை இன்னொரு ஈடேற்றமே.