கேட்கிறதா எம் ஓலம்..?(ஆத்மாக்கள்)!கவிதை.ரதிமோகன்

கொத்துக் குண்டுகளால்
கொத்துக்கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்டோம்
கொலை வெறியர்களின்
கோரப்பற்களால்
கிழித்தெறியப்பட்ட உடல்கள்
சிந்திய உதிரத்தில்
நந்திக்கடலும் செங்கடலானது…

பிஞ்சுக்குழந்தைகள் எம்
நெஞ்சைக் கிழித்தன
பீறிட்டு வந்த
குண்டுகள்…

பதுங்குக்குழிக்குள்
பதுங்கிய எம்மை
பாய்ந்து வந்த செல்
எமக்கு புதைகுழி
அமைத்து சென்றது..

கத்தினோம் கதறினோம்
ஓலமிட்டோம் ஓடிவந்தோம்
காப்பாற்ற எவருமின்றியே
கதறியே உயிர் துறந்தோம்….

ஆசைகள் கனவுகள்
சுமந்த ஆத்மாக்களாய்
அலைகிறோம் திரிகிறோம்
அழுகிறோம் கேட்கிறதா…

ஆக்கம் ரதிமோகன்