கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர்

கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர் உயிர்தெழுந்தார் .
சோஸ்திரம் பாடியவர்கள் மாண்டு விட்டார்கள்.

ஆணி அடித்த போது இயேசு சிந்திய ரத்தம் இப்போது தேவாலயங்களில் வடிந்து கொண்டிருக்கிறது.

கசையடியை விட கொடூரமான வலியில் உறவுகளை இழந்தவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிரசில் குத்திய முள் முடி போல இதயங்களில் துயர் வழிந்து கொண்டிருக்கிறது.

பாவங்களில் இருந்து மீளுவதற்கான ஆராதனை
ஒப்பாரி ஓலமாக கேட்கின்றது.

புனித ஞாயிறு வழிபாடு கண்ணீரில் நனைகின்றது.

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வந்த
தேவனின் பரிசுத்த ஸ்தலங்களில் – உயிர்களை இழந்து தவிக்கின்றோம்.

நெடுந்தீவு முகிலன்