எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு ஜனவரி மாதம் 7ம் திகதி மாலை 3 – 5 மணிக்கு ஸ்கார்போரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அன்று கிடைத்த வருவாய் ‚சிக் கிட்ஸ் ஹாஸ்பிட’லுக்கு ( Sick Kids Hospital) அன்பளிப்புச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு: 1.தமிழ் ஓர் அறிமுகம் – (ஆங்கிலம் & தமிழ்), 2. சிறுவர் கதைகள், 3. தமிழ் படிப்போம் – ஆரம்பநிலை மாணவர்களுக்கானது & 4. தமிழ் படிப்போம் – மேம்பட்டநிலை மாணவர்களுக்கானது.
கலாநிதி மைதிலி தயாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்களான கோதை அமுதன், பொன்னையா விவேகானந்தன் உட்படப் பலர் உரையாற்றினார்கள். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் இறுதியில் நன்றியுரை வழங்கிய எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா நிகழ்வுக்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ‚பதிவுகள்‘ இணைய இதழுக்கும் நன்றியைக் கூறுகின்றாரா என்று பார்த்தேன். மறக்காமல் நன்றி கூறியிருந்தார். பலர் நிகழ்வுகள் பற்றிய விபரங்களைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்புவார்கள். ஆனால் நிகழ்வுகளில் ஆதரவளித்த ஊடகங்களுக்கு நன்றி கூறுகையில் ‚பதிவுகள்‘ இணைய இதழினை மறந்து விடுவார்கள். ஆனால் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா மறக்கவில்லை. நன்றி.