தமிழுக்கு வீரமே அழகு தரணியே அறிந்து நீ பழகு…

நிலம் பிளந்து நிமிர்ந்தது தமிழ்
வான் பிளந்து குதித்தது தமிழ்
தடை கடந்து சிவந்தது தமிழ்
தலை நிமிர்ந்து சிலிர்த்தது தமிழ்.

மரபுகள் சொல்லி எழுந்த இரத்தம்
மான உணர்வில் உச்சி தொடும் முத்தம்.
மரணங்களைக் கடந்து வந்த அர்த்தம்
மார்போடு சுமக்குது உரிமையை நித்தம்.

இது மாவீரத் தமிழின் புரட்சி வேட்கை
இது இலட்சிய வீச்சின் உணர்வு வாழ்க்கை
இது ஓர்ம விழிகளின் எழுச்சி நம்பிக்கை
இது தேசிய ஒற்றுமைச் செயல் நாழிகை.

எதிரியே உச்சி வான் இடிக்கும் எழு தமிழ்
எங்குமே தடையை நொறுக்கும் புலித் தமிழ்
வீழ்ந்தாலும் எழுந்து படைக்கும் யுகத் தமிழ்
வீரத்தால் சாதனை குவிக்கும் பார் மறத் தமிழ்.

மானம் என்று மார்பில் தமிழைச் செதுக்கு 
மண்டியிடாதது தமிழன் குணச் செருக்கு
வாகை தழுவும் காற்றில் ஏறிப் பறக்கும் அழகு
வாழும் தமிழர் உயிரில் தமிழே தமிழர் உலகு….

கலைப்பரிதி.