தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஈழத்து சிறுமி..!

சினிமா செய்திகள்:யு டியூபில் சங்க இலக்கியப் பாடல்களை தனது மழலைக் குரலில் பாடி அசத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த ஒன்பதே வயதான ஞானக்குழந்தை அனன்யா தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனிஷ் அடுத்ததாக ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தை இயக்குகிறார். இவரது இயக்கத்தில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் முதன் முறையாக தமிழில் திரைப் படமாகிறது.

‘மேக்பெத்’ கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். ஃபர்பிள் ப்ரேம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96’புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான ‘லூஸியா”என்ற படத்தில் நடித்தவர். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் “ஏஞ்சலீனா”படத்தில் நடித்து வருகிறவர்.

கதாநாயகி மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.

இந்த படத்துக்கு கூடுதல் சிறப்பாக , அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை பாடல் ஆசிரியையாக அறிமுகபடுத்துகிறார்கள் . லண்டனில் வசிக்கும் இவரின் தமிழ் ஞானமும் சங்க இலக்கிய அறிவும் ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யு டியூபில் வெளியாகி உலகம் பரபரப்பாகி உள்ளதும், உலகம் முழுமையும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.