****துணிவே துணை ****

கருப்பையில் இடம் கொடுத்து
காத்து ,சுமந்து மண்ணில்
கால்பதிக்க கருணை செய்த
கற்பகமேயுன் காலடி போற்றி
*
விருப்பை மட்டுமே என்றும்
விரும்பி மகவுமேல் வீசும்
விண்ணுலகத் தேவதையே
விந்தையான உறவு நீயம்மா.
*
பொறுப்பை உன்னிடம் மட்டும்
பொறுப்புவித்து விட்டு விலகும்
போலி நாடகதாரி ஆண்களின்
பொல்லாத வேஷங்களுக்கு நீயும்
*
மறுப்பைக் காட்டாது வீணே
மானமிழந்து தவிக்கும் மாதே!
மடியில் கட்டிக் கொண்டாயே
மகவை ,வெறும் பாவச் சுமையாய் .
*
சிரிப்பைக் காட்டி கன்னியரை
சீண்டிக் களவாடும் காளைகளை
சீர்கெட்ட அந்தத்தெரு நாய்களை
சீர் திருத்த இனியாவது நாமெல்லாம் ,
*
செருப்பைக்கொண்டு தாக்கியே
செருக்கு நீங்கு மட்டும் அவர்களுக்கு
செஞ்சிருவோம் நடுவீதியில் நிறுத்தி
சேஷ்டைகள் இனி செய்யாதிருக்கும் படி
*
துணிப்பையை சிசுவுக்கு அழகாய்
தூளியாக்கி தெருவில் திரியும் நீ .
துணிவை மட்டுமே உந்தன்
துணையாக கொண்ட தாயே !!
சிசுநேசன்