தூக்கம் தொலைக்க வருவாயா நீ?


எங்கெல்லாமோ தேடி விட்டேன்
காணவில்லை உன்னை இன்று
அலையும் மனதில் சிறு தெளிவு
ஆற்றாமையால் வந்ததோ நானறியேன்

கொஞ்சும் குரலில் மகிழ்வித்தாய்
தேனாய் இனிமை படரவிட்டாய்
தென்றல் தொடும் இதத்தினையே
இதயத்தில் உணர விட்டாய்

தனிமை தரும் வேதனையை
விரட்டி என்னை உறங்க விட்டாய்
தொலைந்து போன இளமையினை
தொடும் கனவை துவக்கி விட்டாய்

மயக்கும் உன் புன்னைகையால்
மன மயக்கம் கொண்டவனின்
மனநிலையை புரிந்தோ நீ
மாயமாய் மறைந்து சென்றாய்

புரிகின்றது பெண்ணே உன்
இடைவெளியின் பேருண்மை
தடம் தவறேன் நானென்றும்
புரிந்து கொள்வாய் என்நிலைமை

நட்பென்னும் ஆழ்கடலில்
அனுதினமும் மூழ்கிடலாம்
உன் எல்லை உனக்கென்றே
கோடொன்று போட்டிடலாம்

என் எல்லை என்றென்றும்
மீறமாட்டேன் இது உண்மை
கவலை வேண்டாம் சகியே நீ
தூக்கம் தொலைத்து பேச வா நீ!

ஈழத் தென்றல்