நான் நானாகவேயில்லை !


எழுத வேண்டுமென்று விரல்கள் எழுத்துகளை அழுத்துகையில் நான் நானாகவேயில்லை என்பதை உணர்கிறேன்.
எழுத்து…….
பொறுமையை கற்றுத்தந்தது.மனிதரை ஆராய்யும் விந்தையைக்கற்றுத் தந்தது. எனது கதாபாத்திரங்களோடு ஒன்றித்து பயணிக்கும் உயிரோட்டத்தை கற்றுத்தந்தது.
இப்போதெல்லாம் பேச்சைக்குறைத்து மௌனமாக உற்றுநோக்கும் விந்தையை கற்றுத்தருகிறது.
கற்றுக்கொண்டேயிருக்கும் கால இடைவளியில் கல்லெறிகளும் விழாமல் இல்லை.
விழும் கல்லெறிகள் எதனால் என்று உணராமலும் இல்லை.
“நான்” -என்பது ஆணவம்.நானாக அல்லாது நாமாக பயணிக்கும் திமிர்த்தனம் எனக்குள் ஏராளம்.
தமிழும் ,பாரதியும் இருகண்களென உணர்வதால் தலை நிமிர்ந்தே உள்ளது.
இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளில் எனது சிறுகதையும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு பாரதி கிருஷ்ணகுமாரின் மதிப்புரையுடன் நூலாக என்கையில்…
இதில் இடம் பெறும் எழுத்தாளர்கள் பட்டியலை வாசிக்கிறேன்….
ஏதோவொரு இனம்புரியாத மகிழ்ச்சி….
குறுகிய காலத்தில் எனக்கொரு இடத்தை நியாயமான முறையில் தக்கவைக்கவும்,என்னை அடையாளம் காணவும் “தமிழ்”துணையாகியுள்ளது.
வீணர் பேச்சுகளை விரட்டிவிடும் துணிவை பாரதி தந்துள்ளான்.
பயணிக்கும் காலம் நானறியேன்
ஆனால்
எனக்கான அடையாளம் வாழத்தொடங்கிவிட்டது.
ப.மதிவாணதி