புதுக் கணம்…

எதுவரை எதுவரை போனாலும் 
மரணம் தானே வெல்லுமடா
எதையும் உலகில் சாதனை வெல்லும் 
மரணத்துக்கும் தெரியுமடா.
நாணயம் என்பது பணமா குணமா
தர்மம் மட்டும் அறியுமடா
நன்மை தீமை யாவும் உலகில்
தடையை வென்ற மர்மமடா.

சத்தியப் பாதை உனது குணமே
சரிவுகள் முடிவு இல்லையடா
சாம்பல் மேட்டில் வாழ்வின் அழுகை
உயிர்ப்பு உலகின் பிள்ளையடா.
பிறந்து வருமே புதிய பாதை
பெயரை வைத்து நடையிடடா
பிஞ்சா காயா கனியா என்று
கவிதை எழுதி முறையிடடா.

திரையை விலக்கும் வாழ்வின் அரங்கில்
உனது நாடகம் முதல் இடம்
திண்ம மனதைக் கரைக்கும் வாழ்வில்
உருகும் மனங்கள் புகலிடம்.
செத்த நெஞ்சைக் கவிதை பாடி
எழுப்ப உந்தும் போர்க் குணம்
செம்மை மொழியாம் தமிழால் ஆடி
வெல்லப் பாயுது புதுக் கணம்….

கலைப்பரிதி.