புதுத்தென்றலாய் பூத்த வரிகள்

எங்கோ வாசித்துப்போகும் கவிதை நீ

எங்கோ வாசித்துப்போகும் கவிதை நீ
நேசித்து பூசித்து நினைவோடு ஒட்டிய கவிதை
காதலின் பரிசத்தில் காத்திரமாய் உதித்த வரிகள்
நாதத்தின் மெட்டில் நயமாய் மனதுக்குள் மத்தளம்

பூவே உனை அடைய புதுத்தென்றலாய்
பூத்த இதய வரிகள் அவை
இராகமாய் பாகமாய் ஒட்டிய கீதங்கள்
ஓரமாய் ரசித்து எங்கோ மூலையில் முடங்கியதே!

நேசித்த அந்த இனிய நாட்களில்
நேரிடை நீ தந்த பரிசத்தின் பாறாங்கல்
கீழிடை வீழ்ந்து கிறுக்கல்கள் ஆகினவே
பாரிடை மீளாத காதல் கனிகள் அவை

வாழ்கையின் வண்ண வரிகளாய் ஓட்டிய பாவையே
கவிதையாய் காலத்தின் தேவையில் நீயும்
பரிதியாய் பள்ளியில் வந்திட்ட புள்ளியே
துள்ளி ஓடி துயரம் மறந்த காலங்கள் ரீங்காரமானவை

எங்கோ வாசிக்கிறேன் ஏகாந்தம் பேசுது
இருவிழிப்பார்வையில் இதமான ஒளிதந்த நவரசமே
குறுமுனி வேடம் தாங்கி குலுங்க வைத்த பெருமை
நினைத்தாலே நெஞ்சில் நிழலான காவியம்

ஓவியமாய் என் மனதில் நிலைக்கும் தென்றலே
ஒங்கார பிரணவமாய் ஒட்ட வைத்த உன் சொற்கள்
நீங்காத உள்ளத்தில் நிலைத்திட்ட வண்ண வரிகள்
பாங்காக என்னுடன் பவனி வரும் வாசிப்பு நீயே

ஆக்கம்  நகுலா சிவநாதன்