புலன்களோடு விளையாடு

என்னை மிரளச்செய்யும்
உன் அன்பினை எதுவென சொல்வேன்.
என் அசைவுகளை கூர்ந்து கவனிக்கும்
உன் கண்களை இன்னும் சரிபார்த்துக்கொள்.
இந்த பூச்சிகளின் அதட்டல்களில்
ஒரு யாமமே கடந்து கொண்டிருக்கின்றது.
நான் பாதைகளை வகுத்துக்கொள்பவன்.
நீ என் வகுத்தல்களின் முன்னிருக்கும் பேரொளி.
வண்ணத்திகளின் இறக்கைகளில் தூரிகையை தடவியபடி
நீ என் பாதங்களை அழகாக்குகிறாய்.
ஆசைகளை மறைமுகமாக கட்டவிழ்க்கும் நடன மங்கையே
என் பேனாக்களின் குமுழினை ஒருமுறை பார்.
இலகுவான இலக்குகளை குறிவைக்கும் உனக்கு
நான் என்பது பேரிலக்கே.
உன் கரங்கள் இன்னும் வலுவாகட்டும்.
பாதங்களை விரைவாக்கிக்கொண்டு இம்மலையை எட்டிவிடு.
பின்னாலிருக்கும் தரிசு நிலங்களை கூர்ந்து கவனி.
புல் நுனியில் ஈரமிருந்தால் அதனை நானென பற்றிக்கொள்.
நீ தேடிக்கொண்டிருக்கும் திசையென்பது
ஆமை வேகத்தில் நகர்ந்திடலாம்.
நீ வாசனைகளை முகர்பவள்.
நான் புலன்களை பருகியவன்.
நாளைய புலர்தலில் நமக்கிடை எதுவுமற்று போகலாம்.
எனை ஆட்கொள்ள நினைக்கும் உன் பேரன்பை
பத்திரமாக அணைத்துள்ளேன்.
என் மீதான உன் தேடலை இக் கோணிப்பையின்
நூலொன்றின் பதின்மூன்றாம் பக்கத்தின்
கடைசி வரியில் வரைந்துள்ளேன் சகியே..