பொழுது விழுங்கி…கவிஞர் தயாநிதி

நேரமில்லை
என்போரையும்
ஈரமின்றியிழுத்து
சாரமில்லா வாழ்வாக்கி
மனிதனை மயக்கியுள்ளது…

முகமறியாப் பலரை
ஒருமுகமாக்கி
ஓயாது முடக்கி
தேங்கு நிலையில்
வைத்திருக்கின்றது.

வதைப்பும் பதைப்பும்
படபட படப்புமென
வித்தைகள் காட்டி
விளைவுகளை
விபரீதமாக்குகின்றது.

ஒரு தலை முடிவு
இருதய ஒதுக்கீடு
இலவச பங்கீடும்
இருட்டினில் பறக்கும்
வௌவாலாய் தொங்கி
மாய்க்கின்றது…

கனவுக்கும்
கற்பனைக்கும்
கருத்து பகிர்வுக்கும்
நியாய வழிகோலியாகி
வேடிக்கை காட்டுது.

ஒட்டாத பலரை
ஒற்றுமையாக்கும்
வேண்டாத விடுப்பால்
வேதனையாக்கி
நிம்மதி குலைக்கும்.

புரிதலும்
பரஸ்பரமும்
தொலை நோக்க
சிந்தனைச் சிதறலும்
சிந்தைக்கும் விருந்தாகும்..

பொழுதும்
விழுங்கும்
இல்லாத எண்ண
மனங்களை
உழுதும் பதனிடும்
முக நூல் முற்றத்தில்
அழகிய கோலமிடு.

ஆக்கம் கவிஞர்தயாநிதி