மீண்டும் ஒரு வருடம்…

பாதைகள் வளைவுகள் பல கடந்தும்,
பயணம் இன்றும் தொடர்கிறது.
போராட்டங்கள் பூசல்கள் தாண்டியும்,
வாழ்ந்து பார்த்திட மனம் தவிக்கிறது.

வாழ்க்கையின் அனுபவங்கள்
தத்துவங்களாய் உருவெடுக்கும்.
கேட்கையில் எல்லாம் சேர்ந்து
உண்மைகளாய் கருவறுக்கும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்”
பாரம்பரிய வழிவந்த வாசகம்தான்.
களைய முனைவது கசப்பானவையதனால்,
கற்றவையென்றும் கனதியானவையே.

ஒவ்வோராண்டிலும் ஓராயிரம் எண்ணங்கள்,
உதித்திட்ட போதிலும் உள்ளூர ஏக்கங்கள்.
புலரும் பொழுதின் பூபாள இராகமென!
இன்னோராண்டும் வருகிறது இலாபமென!

பழைய பூமியில் புத்துணர்வைத் தரவென,
பேராசையில் ஆங்கில ஆண்டு வருகிறது.
புதுக்கணக்குடன் பல சபதங்கள் எடுக்க,
பெருங் கூட்டம் காத்துக் கிடக்கிறது.

கயவர் காழ்ப்புணர்ச்சிகள் எல்லாமே,
காற்றோடு கலந்து கரைந்தாக வேண்டியே!
கனக்கும் இதயத்தின் கனவுகளெல்லாம்,
நனவாகிட வேண்டும் புதியபல வழிகளில்.

ஏற்றமும் இறக்கமும் இயற்கையின் வசமே!
ஒன்றுகூடி செயற்பட வெற்றிகள் கைவருமே!
இன்பமும் அமைதியும் எங்கும் நிலைத்திடவே,
இதயமேற்று வரவேற்போம் புதிய ஆண்டுதனை.

மஞ்சு மோகன்