யாழ். பாரதியார் மன்றம் சென்னைபாரதி மன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சென்னை பாரதி மன்றத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் நடைபெற்றது.
.
மேல்மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தனராகவும் கலந்து கொண்டனர்.
.
யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பாரதியார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, கவிஞர் சோ.பத்மநாதன், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகியோருக்கு பாரதி பணிச்செல்வர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது.
.
யாழ். விழா ஏற்பாட்டுக் குழு சார்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சென்னை பாரதி மன்றத்தின் சேவைகளையும் அதன் தலைவர் இரா.காந்தியின் ஆளுமைச் சிறப்பையும் முன்னிறுத்திப் பேசினார். தமிழகத்தில் ஒரு காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகிய ஈழ விடுதலை ஆர்வலர்களுக்கு கைகொடுத்துச் செயற்பட்டவர் வழக்கறிஞர் இரா.காந்தி என குறிப்பிட்டார்.
.
தமிழகத்தின் பிரபல நடனத் தாரகை கலைமாமணி சோபனா ரமேஷ் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
.
யாழ். இந்து மற்றும் வேம்படி பாடசாலைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களும் சில பொதுமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.