‚ரியூப்தமிழ்‘ வழங்கிய ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீடு.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‚ரியூப்தமிழ்‘ வழங்கிய ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீடு.

அறுபது ஆண்டுகளை ஈழத்து சினிமா கடந்துள்ளது. ஈழத்துக் கலைஞர்கள் தம் வல்லமையை பயன்படுத்தி தொடரான படவாக்கலில் ஈடுபட்டு வருகின்றனர்.

டென்மார்க்கினைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‚ரியூப்தமிழ்‘ நிறுவனத்தின் வெளியீடாக டி.என் தர்சன் இயக்கத்தில், அஜய், பிரணா நடிப்பில், சுதர்சன் இசையில் வெளிவரவுள்ள ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. ரியூப்தமிழ் பண்பலை அறிவிப்பாளர் பானுஷா அறிமுக அறிவிப்புடன் ஆரம்பமான நிகழ்வுக்கு யோ.புரட்சி தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்ச்சினிமா சார்ந்த கருத்துப்பகிர்வை யோ.புரட்சி அளித்தார். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இசை, நடன நிகழ்ச்சிகளை இளைய அறிவிப்பாளர் சங்கர் மற்றும் ரியூப் தமிழ் பண்பலை அறிவிப்பாளர் யாழரசி ஆகியோர் சுவைபட தொகுத்தளித்தனர்.

நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரீமா நடனப்பள்ளினரின் நடனம் மற்றும் ராகம்ஸ் இசைக்குழுவினரின் பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.

பெண் படைப்பாளியும், சண்டிலிப்பாய் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருமான தர்மினி ரஜீபன், ரியூப் தமிழ் இலங்கை பணிப்பாளர் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். தொடர்ந்து ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை இறுவட்டினை ஈழத்தின் திரைத்துறைக் கலைஞர்கள் ரியூப் தமிழ் இலங்கை இயக்குநர் கவிஞர் கம்பிகளின்மொழி பிறேம் அவர்களுடன் இணைந்து வெளியிட்டு வைத்தனர். தொடர்ந்து யாவரும் இறுவட்டினை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் டி.என்.தர்சன், நடிகர் அஜய், நடிகை பிரணா, இசையமைப்பாளர் சுதர்சன் உள்ளிட்டோரின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

நன்றியுரையினை அறிவிப்பாளர் சங்கர் வழங்கினார்.

‚ஒருவன்‘ திரைப்படப் பாடல்களை யோன்சன், உதயரூபன், கபில்ராஜ், கார்மேகம் நந்தா ஆகியோர் எழுதியுள்ளனர். கானா பாலா, அருள்தர்சன், மயூரா சங்கர், ஸ்ரீவிஜய், ஆயுசா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஈழத்துச் சினிமாவின் இன்னுமொரு பாய்ச்சலாக ஒருவன் திரைப்படத்தினை கலைச்சமூகம் எதிர்பார்க்கிறது.