ருத்திர தாண்டவம்..

ஏக்கங்கள்
எங்களுக்கு மட்டும்
காணிக்கையா?
தாக்கங்கள்
உங்களுக்குள்
தணிக்கையா?
தர்க்கங்களும்
குழப்பங்களும்
குடும்பங்களுக்குள் இல்லையா?
குதர்க்கங்கள்
விதண்டா வாதங்களின்
பிடிவாதமில்லையா?
வர்க்க
வேறுபாடுகளின்
புரிதல் புதுமையல்லவா?
மயக்கங்கள்
தோற்ற மாயைகளின்
பிரசன்னமா?
தேகத்தின்
புற அழகில்
கண்கள்
பார்வையிழந்தனவா?
காம ம்
உயிர்த்திட
மோகம் முற்றுகையா?
தாகங்களை
தணித்திட நாங்கள்
பணிப் பெண்களா?
காதல்
என்ற ஒற்றை வார்த்தை
வடிவிழந்தது எங்கனம்?
வரலாற்றை
புரட்டு
இதிகாசங்களை
மீட்டு.
காவியங்கள் சாட்சியமாகும்.
எச் சமர்
எனினும் எங்கள்
முன் நீவீர் துச்சமே!
பதமடி
நின்றால் மகமாயி.
படம் காட்டினால்
பத்திரகாளி.
பரிகசித்தால்
ருத்திர தாண்டவமே…
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி