வலியின் ரணங்கள்!கவிதை ஜெசுதா யோ

 

இதயம் எங்கும்
வலியின் ரணங்கள்
எழுத நினைத்தால்
வார்த்தைகள் தறிகெட்டு ஓடுது
மௌனம் மட்டும்
மொழியானால்
என் வாழ்க்கை முழுக்க
வசந்தம் தருமோ ?

காரணம் தெரியவில்லை
காகிதத்தில் எழுதமுடியவில்லை
கண்ணீருக்கு பஞ்சமில்லை
கடனின்றி கிடைக்கும்
காசில்லாத ஒன்று
அளவுமில்லை அதனால்
பிறருக்கு வருத்தமுமில்லை

எங்கோ தொலைவில்
என் பார்வைகள்
எதுவும் தென்படவில்லை
வெட்டை வெளியாய்
பாலைவனமோ இல்லை இல்லை
இதயத்தின் எண்ணமது

மாண்டு போன உறவுகள் மட்டும்
மனக்ககண்ணில் வந்து போகிறது
ஒன்றா இரண்டா இலட்சங்கள் அல்லவா
நெருங்கும் நாட்களுக்குள்
நெஞ்சம் பதைக்கிறது

உறவாக ஊராக
சொந்தமாக பந்தமாக
தெரிந்தும் தெரியாததும்
சேயிழந்த தாயும்
தாயிழந்த சேயும்

மரங்கள் எங்கும்
தொங்கிய சதைப்
பிண்டங்கள் எல்லாம்
கண்ணுக்குள்
காட்சியாகிறதே

வேண்டாம் என்று
உதறியழ முடியாது
வெற்றுப் பார்வையோடு
வெறித்தபடி நான்
கண்கள் கண்ணீரை மட்டும்
கணக்கின்றி தருகிறது
ஆறுதலுக்கா ??

ஆக்கம் ஜெசுதா யோ

Merken