வாழ்வுக்குள் வசந்தம்…

வாழ்வுக்குள் வசந்தம்…
பாசப் பொழிவின் நனைதலில்
சிறகடிக்கிறது பாடல் மனம்.
பச்சைக் குடை விரித்து நெஞ்சில்
கரைகிறது அந்தப் பாச மரம்.
சலிக்காத பார்வைகளின் தாகத்தில்
ஓசையிடுகிறது உறவு வரம்.
சத்தியம் கடந்த உச்சப் பிரபஞ்சத்தில்
சாமரம் வீசுகிறது வெள்ளை நிறம்.
ஊஞ்சலில் ஏற்றி உல்லாசமாக்கியது
இரத்த சித்தத்தின் இராஜ சிரிப்பு.
உண்மையில் பிரிதல் கண்ட இணைவு
முற்றம் கண்ட கோலத்தின் சிறப்பு.
அற்புத அன்பை ஆத்மத்தில் ஊற்றி
முக அகம் செய்தது காலத்தின் படைப்பு.
ஆலய பக்தியில் அருவ உருவமாய்
முக்தியானது வான் நோக்கிய பறப்பு.
நினைவுகளைக் கடந்து கூச்சலிடுகிறது
நிறந்தீட்டும் அந்த வர்ணத் தூரிகை.
நிலவைத் தொட்ட காதல் இதயத்தை
இலக்கணமாக்கி முழக்கிறது பேரிகை.
மழைச் சாரலும் பனிக் கூதலும்
இனி இங்கு இரவு சுமந்த இலக்கியம்.
மர்மம் கடந்த தினத்தில் அரசு சூடும்
வாழ்க்கை இராச்சியம் இறைமயம்…
கலைப்பரிதி.