விடைகொடுப்பாய்_சிரித்திரா..!


நான் விழுகிற மழை நீர்
நீ எழுகிற காட்டுத்தீ
இப்போது சொல் நாம் எப்படி முத்தமிட
நீ உன்னைப் பெரியதாய் எண்ணும்போது
என் கனவுகளும்
நான் என்னைப் பெரியதாய் எண்ணும்போது
உன் கனவுகளும்
சிதைக்கப்பட்டுவிடுமே சிரித்திரா..!
நாம் இருவரும் சரிக்குச் சரி நின்றுவிட்டால்
சமத்துவம் கிடைக்கும் ஆனால்….
உன் மீது நானும் என்மீது நீயும் காட்டுகிற
போலி விட்டுக்கொடுப்புகளால்
என் கருப்பையும் உன் விதைப்பையும் சுமந்திருக்கிற வருங்காலங்களின் மீது பாறாங்கற்கள் ஊர்ந்து திரியுமே..!
அதை நீ சகிப்பாய் நான் எப்படி…?
எனக்கு விழத்தான் ஆசை
மிருதுவாக
மென்னன்பாய் எனக்கு விழத்தான் ஆசை
நீயொரு பஞ்சென்றால் உன்னுள் புதையவும்
நீ மென் தரையென்றால் உன்னை தழுவவும்
நான் என்றும் மறுக்கப்போவதில்லை
எப்போதுமே காட்டுத்தீயாய் மேலெழுகிறாய்
எத்தனை முறைதான் நான் தீய்ந்து போக
நீ மேலெழுந்தவாறே இரு
அதுவே உனக்கு அழகானது
நான் எட்ட இருந்து உன்னை இரசித்துவிட்டுப்போகிறேன் சிரித்திரா..!
மரணம் போலான ஒரு பிரிவை மாறி மாறி பரிசளிக்கமுன் நான் விலகிவிடுகிறேன் சிரித்திரா!
எந்தப் பழியுணர்வுமற்று
எமக்கிடையேயான பரந்த இடவெளியில்
அமைதியாய் உலாவரட்டும் எம் காதல்
விடைகொடுப்பாய் சிரித்திரா..!
-#அனாதியன்-