விதைத்த மண்ணில் நின்று

வரிச்சை வடிவா பிடியடா தம்பி
அச்சறுக்கை படுத்துவது அவ்வப்போது செய்ய வேண்டியதே…
உருப்படியான வாழ்வொன்று
பார் வியக்கும்படியாக இருந்ததே
கருத்து கூறிக் கூறியே
இருப்பை தொலைத்த இனமல்லவா
உதைத்தவனை துதிபாடும் உங்களை
என்வென்று சொல்வது
கதைத்து கதைத்தே காலத்தை ஓட்டிடும் கைங்கரியத்தை
விதைத்த மண்ணில் நின்று செய்யும் கனவான்களே
வதைபட்டவன் வாழ்விற்கு
நீங்கள் விடும் வாய்ச்சவடால் எல்லாம் மருந்தாகுமா?

ஆளாளுக்கு விடும் அறிக்கை
தேர்தல் கால கூட்டிற்காக புதுப் புது கொள்கை
பிடரி மயிர் பிடித்து உலுப்பியே
பேரம் பேசுறம் என்ற உசுப்பல் வார்த்தை
வேளா வேளைக்கு வெடிக்கும் என்ற வேடிக்கை பத்திரிகை தலைப்பை
மூலை காலையில் கிடந்தவனெல்லாம்
ஆளை விட்டால் எவருமில்லை
என்று விடும் முகநூல் அலப்பறையை
இத்தனையும் இருந்து பார்க்கவா அத்தனை விலைகொடுத்தோம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்.

ஆக்கம் பவளம் பகிர்