விலையற்ற பொக்கிசம்!கவிதை நகுலா சிவநாதன்

வாழ்வுச்சக்கரத்தில் வலக்கரமானவள்
உருள்கின்ற வாழ்வின் உந்து சக்தி நீ
உலகத்தின் இல்ல விளக்காய் ஒளிர்பவளே!
உண்மையில் விலைமதிப்பற்ற பொக்கிசம் நீதான்

விலையில்லா உலகில் கலையான தெய்வமே!
காலை மாலை பார்க்காமல் வாழ்வு தந்தவளே!
வானவில்லாய் வளையும் வர்ணத் தேவதையே!
விலையற்ற பொக்கிசம் நீ விதி செய்த சித்திரம்

கண்மூ‌டிக்கிடக்கையில் கருவறை சுமந்தவள்
கண்விழித்து பார்க்க காலத்தை காட்டியவள்
காலம் தந்த காதல் தெய்வம் அம்மா நீதான்
உயிரான எனக்கு உணவு ஊட்டிய உத்தமியே!

அன்பென்ற பொக்கிசத்தால் அணைத்தவளே!
பண்பென்ற உணர்வால் பாசம் ஊட்டியவளே!
கண்‌ணெனக் காத்த தென்றல் நீயே!
ஆண்டவன் தந்த அற்புதச்சித்திரம்
அம்மா என்ற விலையற்ற பொக்கிசம்

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்