வையம் வசப்படும்..


கதைகளைக் குறை
விதைகளை விருட்சங்களாக்கு.
வீர வேங்கைகளை
நெஞ்சினில் நிறுத்து.
உண்மையாய் உழை
விரும்பியது அரும்பும்..!
போட்டி பொறாமைகளை
கிள்ளி எறி
நான் பெரிது
நீ பெரிது எனும்
பேதமைகளை
புறம் தள்ளு…!
காலம் படு வேகம்
ஆண்டுகள் ஒன்பது
ஓடிக் கழிந்தது
ஏது நாம் செய்தோம்
என்றெண்ணி தினம்
உயிர்த்திடு
காத்திருந்தால் நம்
கவலைகள் ஆறது.
ஈழம் சிதைந்ததை
நெஞ்சினில் நிறுத்து..!
முள்ளி வாய்க்காலில்
அள்ளிக் கொடுத்த
உயிர்களின் விலை கண்டு
விம்மியது போதும்..
கடமைகளை உணர்
கருத்துக்களில் ஒன்றாகு.
வென்றாகலாம்..!
ஆடிக் கெடுத்த அரசையும்
கூடிக் கெடுத்தவனையும்
குறி வைத்து நிமிர்.
கைகளைப் பற்று
குரல்களை உயர்த்து.
வானம் சிவக்கும்
வையம் வசப்படும்
பைந்தமிழ் சிரிக்கும்..